Tamilnadu

போதை பொருட்கள் விற்பனையின் தலைமையிடமா தமிழகம்? - 20 நாளில் 74பேர் கைது: வேடிக்கை பார்க்கிறதா அதிமுக அரசு?

சென்னையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் புழக்கம் அதிகமானதையடுத்து, அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியாக ‘டிரைவ் அகைன்ஸ்ட் டிரக்’ (drive against drug) என்கிற நடவடிக்கையைச் சென்னை காவல்துறை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக, சென்னை முழுவதும் பல பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் பெருமளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த போதைப் பொருள் கும்பல் குறிப்பாகக் கஞ்சா கடத்தும் கும்பல் கல்லூரி மாணவர்களைத் தான் குறிவைத்து இந்த தொழிலில் ஈடுபடுத்துவதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். எனவே கடந்த சில நாட்களாகக் கைது மற்றும் வாகன பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் இன்றுவரை 283 கிலோ கஞ்சாவும், 1165 கிலோ குட்கா பொருட்களும், 18 கிராம் கொக்கைன், 21 கிராம் எம்.டி.எம்.ஏ எனப்படும் போதை பவுடர், 542 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில், அதிகபட்சமாக கோட்டூர்புரம் பகுதியில் 355 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், செம்மஞ்சேரி பகுதியில் 320 கிலோ குட்காவும், ராஜமங்களம் பகுதியில் 300 கிலோ குட்கா பொருட்களும், கிண்டியில் 90 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சாவைப் பொறுத்தவரை ராயப்பேட்டையில் அதிகபட்சமாக 167 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரு நைஜீரியா வாலிபர் உட்பட 74 பேரை காவல்துறையினர் கடந்த 20 நாட்களில் கைது செய்துள்ளனர்.

இந்த அளவிற்கு, சென்னையில் கஞ்சா, கொக்கைன், குட்கா, எம்.டி.எம்.ஏ எனப்படும் போதை பவுடர், போதை மாத்திரைகள் என்று அனைத்து வகையான போதைப் பொருள் பயன்பாடும் தமிழ்நாட்டில் இந்தளவிற்கு புழங்குவதை இந்த ஆளும் அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதா? என்பதே பொதுமக்களின் கேள்வியாகியுள்ளது.