Tamilnadu

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் : வாங்குவோருக்கு கூடுதல் சலுகை வழங்க மத்திய அரசு ஆலோசனை!

ஏர் இந்தியா நிறுவனம் கடனில் சிக்கித் தவித்து வருவதால் அதன் 100% பங்குகளையும் விற்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது, எனவே தனியார் மயமாக்கலை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக மத்திய அரசு இறங்கியுள்ளது. எனவே ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்புவோர் விண்ணப்பம் தாக்கல் செய்யலாம் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில் தற்போது நிறுவனத்தை வாங்குவோர்க்கு அதிக அளவில் சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.60,074 கோடி கடன் உள்ளது. மேலும் ரூ.23,286.5 கோடியை அந்த நிறுவனத்தை வாங்குவோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது. இதன் காரணமாகவே அந்த நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

"ஏர் இந்தியாவில், கடன் தொடர்பாக முதலீட்டாளர் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க முயற்சித்து வருகிறோம். குறைந்தது ஈஓஐ கட்டத்திலாவது நாங்கள் சலுகையைக் கொடுக்க முடியுமா என்பதையும், மேலும் கடனை முன்கூட்டியே முடக்குவதை விடச் சந்தை மூலம் தீர்மானிக்கலாம் என்பத்தைதான் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்று முதலீடு பொதுச்சொத்துகள் மேலாண்மைத் துறைச் செயலர் துஹின் பாண்டே ஒரு பேட்டியில் கூறினார்.

மேலும் Preliminary information memorandum” (PIM) எனப்படும் ஆரம்ப தகவல் மெமோராண்டமில் (பிஐஎம்) மாற்றம் ஏற்பட்டால் முதலீட்டாளர்களுக்குக் கேள்விகளை எழுப்ப அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது கொரோனா தொற்று காரணமாகவும் விமானத்துறை கடும் நஷ்டத்தில் உள்ளதால் விரைந்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்ப விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் வரை ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன்வரவில்லை என்பது குறுப்பிடத்தக்கது.