Tamilnadu

அண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி!

காஞ்சிபுரம் அருகே 1.39 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக பாஜகவை சேர்ந்தவர் உட்பட 2 நபர்களை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புக்குழி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகாமையில் ரூ.1.39 கோடி மதிப்பில் 2.30 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது.

இந்நிலத்தினை காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழில் அதிபர் அக்‌ஷய் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வாங்க முடிவெடுத்து அதற்காக முன்பணமாக 80 லட்ச ரூபாயை நாகராஜிடம் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட நாகராஜ் இதுவரை நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமலும் கொடுத்த பணத்தை திரும்ப அளிக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கட்டுமான தொழில் அதிபர் அக்‌ஷய் இது குறித்து காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து கட்டுமான தொழில் அதிபர் அக்‌ஷய் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு மற்றும் பொருளாதார குற்றவியல் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது நாகராஜ் மற்றும் அவரின் மகன் ஸ்ரீநாத் திருப்புக்குழியிலுள்ள 2.30 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே கண்ணன் என்பவருக்கு ஒப்பந்தம் செய்து ஏமாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. ஒரே சொத்தை இரு வேறு நபர்களிடம் காண்பித்து ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நாகராஜ் மற்றும் அவரின் மகன் ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜ் கடந்த வாரம் தான் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேனியில் சாதி ஆதிக்க கொடுமை: தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் பாஜக து.தலைவர்!