Tamilnadu
“பால் விற்பனை விலையை ரூ.20 குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” : பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!
பால் விற்பனை விலையை 20.00ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பால் நிறுவனங்களுக்கும், பால் முகவர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 நோய் பெருந்தொற்றினால் கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் தேனீர் கடைகள், உணவகங்கள் முற்றிலுமாக செயல்படாததாலும், பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறாததாலும் வணிக ரீதியிலான பால் விற்பனை என்பது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததை பிரதான காரணமாக முன் வைத்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பாலுக்கான கொள்முதல் விலையை கடுமையாக குறைத்து விட்டன.
ஏற்கனவே வணிக ரீதியிலான பால் விற்பனை என்பது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் தனியார் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களிடமிருந்து பாலினை கொள்முதல் செய்ய மறுத்து வந்த சூழலில், பால் கொள்முதல் விலை குறைவு மாடுகளுக்கான தீவனங்கள் வாங்கவும், மருத்துவம் உள்ளிட்ட பராமரிப்பு செலவினங்களைக் கூட ஈடுசெய்ய முடியாத வகையில் அவர்களை கடுமையாகவே பாதித்தது.
இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததால் தேனீர் கடைகள், உணவகங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கி விட்டன. குறிப்பிட்ட அளவு மக்களோடு விழாக்கள் நடத்தலாம் என்பதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் நடைபெற தொடங்கி விட்டன.
தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கி விட்டதால் வணிக ரீதியிலான பால் விற்பனையும் வழக்கமான இலக்கை அடைய தொடங்கி விட்டது. ஆனால் தற்போது விற்பனை அதிகரித்த சூழலிலும் தனியார் நிறுவனங்கள் ஊரடங்கை காரணம் காட்டி குறைத்த பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடாமல் கொள்ளை லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி லாபம் இன்றி இழப்பில் செயல்பட்டு வருவதாக கூறி வந்த அனைத்து தனியார் நிறுவனங்களில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பால் முகவர்கள் ஏற்கனவே கொள்முதல் செய்யும் பால் மற்றும் தயிர் சராசரி அளவை விட கூடுதலாக வாங்கும் ஒவ்வொரு லிட்டருக்குக்கும் 10.00ரூபாய் முதல் 20.00ரூபாய் வரை மட்டுமின்றி இருசக்கர வாகனம், தங்க நாணயங்கள், டிவி, ப்ரிட்ஜ், செல்போன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு சலுகைகளை தருவதாக கூறி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, பால் முகவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய்ந்து தங்களின் லாபத்தை பன்மடங்கு பெருக்கி கொண்டு வருகின்றன. வழக்கம் போல் தமிழக அரசும், பால்வளத்துறை அமைச்சரும் இதனை கண்டும், காணாதது போல் கடந்து செல்கின்றனர்.
கோவிட்-19 நோய் தொற்று காலத்தில் பால் விற்பனை குறைந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தற்போது, விற்பனை அதிகரித்து வரும் நிலையில் குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலையை உயர்த்திட முன் வராததற்கும், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பால் உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்யான காரணத்தை கூறி விற்பனை விலையை லிட்டருக்கு 6.00ரூபாய் முதல் 8.00ரூபாய் வரை உயர்த்திய நிலையில் தற்போது உற்பத்தி அதிகரித்து, கொள்முதல் விலை லிட்டருக்கு 20.00ரூபாய் வரை குறைந்துள்ள சூழலில் அதன் பலனை மக்களுக்கும் வழங்காமல் சுயநலத்தோடு நடந்து கொள்வதற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே தற்போது நிலவும் சூழலை கவனத்தில் கொண்டு குறைக்கப்பட்ட பால் கொள்முதல் விலையை கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருந்த கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு வழங்கிடவும், பொதுமக்களுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 20.00ரூபாய் வரை குறைத்திடவும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் பால் கொள்முதல் விலையை குறைப்பது மற்றும் விற்பனை விலையை உயர்த்துவது என நினைத்த போதெல்லாம் தன்னிச்சையான முடிவெடுத்து விவசாய பெருமக்களையும், பொதுமக்களையும் அல்லல்பட வைக்கும் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்த வேண்டும், மின்சாரம், பேருந்து, ஆட்டோக்களுக்கு அதிகபட்ச கட்டணங்களையும், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையையும் தமிழக அரசே நிர்ணயம் செய்வது போலவும், கரும்பு, நெல் போன்ற விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இருப்பது போன்றும் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையையும் தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பல ஆண்டு கோரிக்கையை தற்போதைய சூழலிலாவது செயல்படுத்திட தமிழக அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?