Tamilnadu

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை : அவமானம் தாங்காமல் பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை மேடவாக்கம், அன்னை எம்.ஜி.ஆர்.நகர், பாரதிதாசன் தெருவில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவரது மகள் குமுதபிரியா (15). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று இரவு வீட்டில் உள்ள ஊஞ்சல் கட்டும் கொக்கியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவியின் தம்பி சந்தோஷ் வந்து பார்த்து அக்கா தூக்கில் தொங்குவதாக தனது தாய் மற்றும் அக்கம்பக்கதினரிடம் தெரிவித்தவுடன் அக்கம்பக்கத்தினர் குமுதபிரியாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தார். உடனடியாக பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் விரைந்த வந்த பள்ளிக்கரணை போலிஸார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை செய்தபோது, கடந்த 7 ஆம் தேதியன்று மாணவி குமுதபிரியாவை பாலியல் தொந்தரவு செய்த அவரது தந்தை சுரேஷ்குமார் மீது மடிப்பாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு தந்தை சுரேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்று முதல் மனவேதனையில் இருந்த மாணவிக்கு அக்கம்பக்கத்தினர் பேசும் பேச்சுகள் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தியதால் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆறுதல் கூறி நம்பிக்கை அளித்திருந்தால் இதுபோன்ற தற்கொலை எண்ணம் சிறுமிக்கு ஏற்பட்டு இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Also Read: தியானம் செய்ய வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!