Tamilnadu

“மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு சட்ட மசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன்?” - மதுரை ஐகோர்ட் கேள்வி!

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு, உள் ஒதுக்கீடு சட்ட மசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மருத்துவப்படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, 2020 - 21ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாணவர் உள்ளிட்ட இருவர் பொது நல மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரித்தது. அக்.,14ம் தேதி நடந்த விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “அக்., 16ல் நீட் முடிவு வெளியாக உள்ள நிலையில், சட்டத்தின் நிலைப்பாடு என்னவென்று தெரியாத பட்சத்தில், நடப்பு ஆண்டில், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஆளுநரின் செயலரிடம் விபரம் பெற்று, 16ம் தேதி தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரை, மருத்துவ கவுன்சிலிங் நடைபெறாது. மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், சட்ட மசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன்? எடுக்கும் முடிவு என்னவாயினும், முன்பாகவே அதனை தெரிவிக்கலாமே என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விசாரணையின் போது, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்துப் பேசிய நீதிபதி கிருபாகரன், கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கினார்.

Also Read: நீட் : 7.5% உள் ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் என்ன ஆனது? - ஆளுநரின் செயலருக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்!