Tamilnadu

உரம் இருப்பு பற்றி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மாறுபட்ட கருத்து: சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை!

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நடவு பணிகள் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் கடும் வெயிலும் திடீர் திடீரென பெய்து வரும் மழையின் காரணமாக நெற்பயிர்கள் வாடும் நிலையில் உள்ளது. உடனடியாக இடுஉரம் கொடுத்து பயிரை வளர்க்க வேண்டிய நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் கடுமையான உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவாரூர் வட்டாரம், குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான் பகுதி உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனை பயன்படுத்தி  தனியார் நிறுவனங்களில் உரத்தை கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சிவக்குமாரிடம் கேட்டபோது, இந்த  அக்டோபர் மாதத்திற்கு மட்டும் மாவட்டத்தில் 20,000 டன் உரம் தேவைப்படும் நிலையில், தற்போது 3800 டன் மட்டுமே இருப்பு உள்ளது. வரும் 17ம் தேதிக்குள் மேலும் 6,500 டன் உரம் வர உள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் காமராஜ் செயதியாளர்களிடம் பேசும்போது, திருவாரூர் மாவட்டத்தில் உரத்தட்டுபாடு இல்லை, அனைத்து உரங்களும் போதுமான அளவுக்கு கையிருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

உரம் இருப்பு பற்றி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மாறுபட்ட கருத்தை தெரிவிப்பதால் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கடுமையான கொரனோ கால பொருளாதார நெருக்கடியின் மத்தியில் கடும் சிரமத்தில், விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு உடனடியாக உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “கஷ்டப்பட்டு விளைய வெச்ச தேயிலையை வாங்க மறுக்கும் தொழிற்சாலைகள்”: தவிப்பில் வாடும் கோத்தகிரி விவசாயிகள் !