Tamilnadu

10வது மட்டுமே படித்து சாதித்த சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? - அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை குட்டு

தமிழகத்தில் மூன்று ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாக தெரிகிறது. ஒன்று அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார், மற்றொன்று கிரிக்கெட் ஸ்டார் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், துவரிமானை சேர்ந்த மதுரேசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,

"இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் (அறிவுத்திறன் குறைந்த) மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவில் பதக்கங்கள் பெறுகின்றனர். இவர்களில் பலர் பல்வேறு பதக்கங்களையும் பரிசுகளும் பெறுகின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பில் ஊக்குவித்து ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கும் பரிசுகளும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது இல்லை.

இந்த வீரர்களையும் மத்திய, மாநில அரசுகள் சமமாக பார்ப்பதில்லை. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பதில்லை. எனவே தமிழகத்தில், சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மாநில அளவிலும் உலக அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கங்களையும், பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இருப்பினும் அவரை தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமனம் செய்துள்ளது. இதே போல பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா..?

மாற்று திறனாளிகள் விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களை உலக நாடுகள் வெகுவாக பாராட்டி கொண்டாடுகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த வீரர்களை கொண்டாடுவது கிடையாது. இது போன்ற நிலையை ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்களான தெலுங்கானா ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் தமிழகத்தில் 90க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற மாற்றுத்திறனாளியான ஒருவருக்கு பத்தாவது மட்டுமே படித்துள்ள காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்துள்ளனர். விளையாட்டு எது என்பது முக்கியமல்ல அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கொண்டு ஒருவர் விளையாட்டில் சாதித்து இருக்கிறார் என்பதே முக்கியம்.

விளையாட்டுத்துறையில் சாமானியர் ஏழை எளிய வீரர்கள் சாதிப்பதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசால் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகத்தில் மூன்று ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாக தெரிகிறது. ஒன்று அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார் , மற்றொன்று கிரிக்கெட் ஸ்டார் இந்த மூன்று ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் அரசு உதவித்தொகை விவரம் மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன எனவும், சிறப்பு குழந்தைகளுக்கான திட்டங்கள் என்ன என்பது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுக்கு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: ராகவேந்திரா மண்டபத்துக்கு சொத்து வரி கட்டாத ரஜினிகாந்த்.. அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை!