Tamilnadu

நீட் : 7.5% உள் ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் என்ன ஆனது? - ஆளுநரின் செயலருக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்!

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், சுகாதாரத்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், சட்டத்துறை செயலர் உள்ளிட்டோர் 6 உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அரசு இதற்கு ஒப்புதல் வழங்கி ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் முடிவுகள் அக்.16 அன்று வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் நீட் தேர்வுகளின் முடிவுகள் நாளை மறுநாள் அன்று வெளியிடப்பட உள்ளது. ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் பரிந்துரைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. எனவே உடனடியாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என முறையிட்டார்.

பின்னர் நீதிபதிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டமன்றத்தில் சட்டம் எப்போது இயற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். பின்னர் அந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு மனுதாரர் தரப்பில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் எழுதியதில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் ஒரு சதவீத மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவ படிப்பிற்கு சென்றனர். நீட் தேர்வு வந்த பின்னர் 0.1 சதவீதம்தான் தற்போது மருத்துவ படிப்பிற்கு செல்கின்றனர் என்று கூறப்பட்டது. 2018 முதல் 2020 வரையில் இரண்டு கல்வி ஆண்டுகளில் 11 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பிற்குந் சென்றுள்ளனர் என்று தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள், பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கும் அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டு உள்ளனர். பெரும்பான்மையான மாணவர்களின் வருங்காலம் இந்த முடிவை நோக்கித் தான் உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளது.

இது குறித்து உடனடியாக முடிவெடுப்பது அவசியமானது எனக் கூறிய நீதிபதிகள் கவர்னரின் செயலர் இது தொடர்பாக மதியம் 2.30 மணிக்கு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு காப்பியை உடனடியாக இ-மெயில் மற்றும் வாட்ஸ்-அப்பில் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Also Read: 10வது மட்டுமே படித்து சாதித்த சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? - அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை குட்டு