Tamilnadu

எந்த விதியின் கீழ் கொரோனா பாதித்தவரின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுகிறது? - அதிமுக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய கணவருக்கு அறிகுறியே இல்லாத கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் தங்களிடம் எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள் என்று ஒப்புதல் கூட கேட்காமல் தன்னுடைய கணவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வலுக்கட்டாயமாக மையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் அழைத்து சென்ற கொரொனா சிகிச்சை மையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும், தனிமனித இடைவெளியும் பின்பற்றவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன் கணவரை மையத்திற்கு அழைத்து சென்ற பின் தன் வீட்டை தகரம் வைத்து அடைத்தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கொரொனா பாதிப்பு உள்ளவர்களை கொரொனா மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, கொரொனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்த பகுதியில் தகரம் அடிக்கபடுவதன் காரணம் என்ன?

என்ன விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

Also Read: சென்னை தெருக்களில் மீண்டும் தகரத் தடுப்புகள்: முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கை இல்லாததால் மக்கள் அவதி!