Tamilnadu

திருச்சி அருகே தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு : வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க அரசு?

தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல் முயற்சித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இந்துத்வா தலைத்தூக்க முடியாததற்கு மிக முக்கிய காரணமாக தந்தை பெரியார் விளங்குகிறார் என்பதால் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

நாடே போற்றும் தலைவரின் சிலையைச் சேதப்படுத்தி அதில் ஆனந்தம் அடையும் அற்ப நடவடிக்கையும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கதையாகியுள்ளது. சமீபத்தில்கூட கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்தன.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இந்த பெரியார் சமத்துவபுரத்தின் நுழைவு வாயில் முன்பாக தந்தை பெரியாரின் மார்பளவு சிலை உள்ளது.

இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு இருப்பதையும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக அங்கு வந்த மணிகண்டன் காவல்துறையினர், பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த செருப்பு மாலையை உடனடியாக அகற்றிவிட்டு, சிலை மீது பூசப்பட்டிருந்த காவி சாயத்தை துடைத்து தூய்மை படுத்தினர்.

நடு இரவில் மர்ம நபர்கள், யாருக்கும் தெரியாமல் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு இந்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரி அந்த பகுதியினர் முழக்கம் எழுப்பினர்.

உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும், சம்பவ இடத்தையும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அங்குள்ள பதட்டமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.