Tamilnadu

#SPB உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி : இரவு முழுவதும் காத்திருந்த ரசிகர்கள் கண்ணீருடன் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் 50 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று பிற்பகலில் உயிரிழந்தார். இதனால் திரையுலகமும், இசை ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

எஸ்.பி.பி மறைவுக்கு எஸ்.பி.பி. மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட எஸ்.பி.பி உடல் மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து இரவு பத்து முப்பது மணி அளவில் அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது, நுங்கம்பாக்கத்தில் இருந்து வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக, மாதவரம், செங்குன்றம், ரெட்டேரி, பழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இரவு பதினோரு மணி அளவில் தாமரைபாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு பாலசுப்பிரமணியம் உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் கொண்டு வரப்பட்ட செய்தியை அறிந்த பொதுமக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அங்கு திரண்டு அஞ்சலி செலுத்துவதற்காக இரவு முழுவதும் காத்திருந்தனர்.

இந்நிலையில், அவரது வீட்டின் முன்பு காத்திருந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் வரிசையில் நின்று எஸ்.பி.பி உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பண்ணை வீட்டில் பொதுமக்கள் யாருக்கும் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பண்ணை வீட்டில் அவரது இறுதிச் சடங்கு இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “காலம் பிரித்தாலும் அவரது தேன் குரல் காற்றில் தவழும்” - பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!