Tamilnadu

செல்போனில் ‘பப்ஜி’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை : ‘கேம்’ மோகத்தால் நடந்த சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார். இவர் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா கருமன்கூடல் பகுதியில் தனது கணவரின் சொந்த வீட்டில் இரணியல் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சஜன் வயது 14 என்பவருடன் வசித்து வந்தார்.

மகன் சஜன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகள் பூட்டிய நிலையில். கடந்த 5- மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தான். தந்தை தனது தாயாருக்கு வாங்கி கொடுத்த செல்போனில் அவ்வப்போது ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளான். மேலும் பப்ஜி கேமுக்கு அடிமையாகியுள்ளான்.

இதில் கடந்த சில வாரங்களாகவே பணத்தை இழக்கவே தாயாரிடமும் வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கீதா தனது கணவரிடமும் கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து தந்தை செல்போனில் மகன் சஜனை கண்டித்துள்ளார். இதனால் சஜன் தனது தாயாரிடம் தகராறு செய்து, கோபத்தில் செல்போனை வீட்டு முன் எறிந்து உடைத்து விட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார்.

நேற்று வீட்டிற்கு வந்து பணமும் புதிய செல்போனை வாங்கி தர வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். தாயார் மறுக்கவே வீட்டிலிருந்து வெளியே சென்றார். இந்நிலையில் சஜன் அருகில் இருந்த வாழை தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

அதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மாணவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மண்டைக்காடு போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறு குழந்தை கவனிப்பாரின்றி தாயாரின் செல் போனில் பப்ஜி கேம் விளையாடி, ஆன்லைன் ரம்மியில் பணத்தையும் இழந்து உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ‘பப்ஜி’ காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த காவல்துறையினர்..!