Tamilnadu

மாற்று இடம் வழங்காமல் காலி செய்ய நோட்டீஸ் : அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஈரோட்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதால் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு கே.வி.ராமலிங்கம் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பெரியார் வீதி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சத்துணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம் மற்றும் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அங்கு வந்த ஈரோடு குயவன்திட்டைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநகராட்சி நிர்வாகம் ஓடைப்புறம்போக்கில் உள்ள தங்களது வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அளித்துள்ளதாக புகார் தெரிவித்தனர்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டு தங்கள் பிரச்னைக்கு தீர்வு கோரினர். இதையடுத்து அ.தி.மு.க ஆதரவாளர்கள் பொதுமக்களை அங்கிருந்து மிரட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.