Tamilnadu

காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ‘பப்ஜி’ காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த காவல்துறையினர்..!

முகநூல் காதல், டிக்டாக் காதல் என காலத்திற்கேற்றாற்போல் காதலும் மாற துவங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது ஒருபடிமேல் சென்று குமரியில் பப்ஜி விளையாட்டு மூலம் காதலில் இணைந்துள்ளனர் இளம் காதல் ஜோடிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளை சேர்ந்த சசிகுமார் என்பவரின் இளைய மகள் பபிஷா(20). இவர், திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த பபிஷா மொபைல் போனில் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்டதால், மணிக்கணக்கில் பப்ஜியில் விளையாடியுள்ளார். பெற்றோரும் மகள் ஏதோ விளையாட்டில் தான் ஆர்வமாக இருக்கிறார் என கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதனிடையே, பபிஷாவுக்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகனான அஜின் பிரின்ஸ் (24) என்பவருடன் பப்ஜி விளையாட்டின் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய பபிஷா அஜின் பிரின்ஸுடன் தலைமறைவானார்.

இதனையடுத்து, தனது மகளை காணவில்லை என சசிகுமார் திருவட்டார் காவல்நிலையத்தால் புகார் அளித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் காதல் ஜோடிகளை தேடி வலையை வீச துவங்கினர். காவல்துறையினர் தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள், 22ம் தேதி திருவட்டார் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், இருவீட்டாரும் காதலுக்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினரே குடும்பத்தினர் முன்னிலையில், அருகிலுள்ள ஆலயத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்து, காதலர்களை அஜினின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Also Read: பப்ஜி விளையாட முடியாததால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை : ‘கேம்’ மோகத்தால் நடந்த சோகம்!