Tamilnadu

திருடச் சென்ற வீட்டில் மது போதையில் தூங்கிய பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது!

சென்னை மதுரவாயல் அருகே உள்ள அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் வீட்டில்தான் இந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து சரியாகத் தண்ணீர் வராததால், பிரபாகரன், ஒரு பிளம்பருடன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.

மாடியில் ஒருவர் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த இளைஞர், இவா்களைப் கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் வீட்டு உரிமையாளர் பிரபாகரனும் உடனிருந்த பிளம்பரும் அந்த இளைஞரைப் பிடித்து மதுரவாயல் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலிஸார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், கொளத்தூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான முத்தழகன் (23) என்ற அந்த நபர், உணவு விநியோக நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், குடும்ப வறுமை, நெருக்கடி காரணமாகத் தனியாக இருந்த பிரபாகரன் வீட்டில் திருடச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில், திங்கட்கிழமை நள்ளிரவு மது அருந்திவிட்டு வீட்டின் சுவர் ஏறிக் குதித்து மொட்டை மாடிக்குச் சென்ற முத்தழகனுக்கு, அங்கிருந்த கதவை உடைக்க முடியவில்லை, இதனால் சிறிது நேரம் மொட்டை மாடியில் ஓய்வு எடுத்துள்ளார். ஆனால் மது போதையில் தூங்கியதால், பொழுது விடிந்தநிலையில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மீண்டும் படுத்துத் தூங்கியுள்ளார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறலாம் என நினைத்தபோது, அங்கு வந்த வீட்டு உரிமையாளர் பிரபாகரனும், பிளம்பரும் முத்தழகனை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து, முத்தழகனை கைது செய்தனர்.

Also Read: பா.ஜ.க-வை பின்பற்றும் அ.தி.மு.க? : கஞ்சா விற்பனை செய்த ஆளுங்கட்சி பிரமுகர் தூத்துக்குடியில் கைது!