Tamilnadu

எடப்பாடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: இறுதி விசாரணை தேதியை அறிவித்தது சென்னை ஐகோர்ட்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின்னர், முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, 2017 பிப்ரவரி 18ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காத சபாநாயகர், தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதமானது எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: முன்னோடி மாநிலம் என தம்பட்டம் அடிப்பதை நிறுத்தி இனியாவது ஆக்கபூர்வமாக செயல்படுவாரா எடப்பாடி பழனிசாமி?