Tamilnadu

“ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பட்டாலியன் காவலர் தற்கொலை” : உயிர் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் பல குடும்பங்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ளன.

ஊரடங்கு காலத்தில் மட்டுமே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட தளங்களால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.

மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தாலும், சீன செயலிகளை தடை செய்யும் மத்திய அரசு, இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து பட்டாலியன் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். பட்டாலியன் காவலரான வெங்கடேஷ், தற்போது சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள அரசு பள்ளியில் தங்கி பணியில் ஈடுபட்டு வரும் இவர் ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வந்ததுள்ளார்.

முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர் பின்னர் பணம் வைத்து விளையாடியதாக தெரிகிறது. அப்படி பணம் வைத்து விளையாடியதில் அதிக அளவு பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த வெங்கடேஷ், தான் தங்கிருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைவாசல் போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் விளையாட்டால் தொடரும் உயிர் பலிகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: உயிர்குடிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் - மவுனம் காக்கும் மத்திய அரசு!