Tamilnadu

“திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொடூர மரணம் : மக்களைக் கொல்லும் அரசு” - மு.க.ஸ்டாலின் காட்டம்!

திருப்பூர் முருகானந்தபுரத்தைச் சேர்ந்த யசோதா (67) கடந்த 19-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பூர் வெங்கடேஸ்புரத்தைச் சேர்ந்த கெளரவன் (59) கடந்த 21-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுக்குச் செல்லும் மின் ஒயர், கட்டிடப் பணியால் துண்டானதாகத் தெரிகிறது.

இதையடுத்து மின்சாரமின்றி செயற்கை சுவாசம் அளிக்கப்படாமல் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இன்று யசோதா, கௌரவன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அலட்சியமாக செயல்படும் அ.தி.மு.க அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “திருப்பூர் அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகிய இருவரும் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்கள். இவர்களது மரணத்துக்குக் காரணம் ஐசியூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் இவர்களுக்குத் தரப்பட்டு வந்த ஆக்சிஜன் தடைப்பட்டுள்ளது. இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது.

உலக விருதை எல்லாம் பெற்றுவிட்டதாக உளறிவரும் எடப்பாடி ஆட்சியின் இலட்சணம் இது! கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன! மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “பா.ஜ.க அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் முயற்சி” - மு.க.ஸ்டாலின் மடல்!