Tamilnadu

நாகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரே ஆண்டில் ரூ.345 கோடி மோசடி? - விவசாயிகள் புகார்!

பருவம் தவறிப் பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பு, பயிர் சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய சாகுபடி வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்காக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பருவத்திலும் அந்த வட்டாரத்திற்கு ஏற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு, சாகுபடி செய்ய உள்ள பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்து இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். பொதுச்சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பிரீமியம் தொகையைச் செலுத்தி காப்பீடு செய்து பயிர் இழப்பு ஏற்படும்போது விவசாயிகள் இந்த இழப்பீட்டு தொகையால் பயன் பெறுவார்கள்.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் மட்டும் 2019-2020-ம் ஆண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு 1,148 ரூபாயும், மத்திய மற்றும் மாநில அரசுகள் 2,852 ரூபாயும் பிரீமியமாகச் செலுத்தியுள்ளனர்.

இதன்படி 410,31,90,000 ரூபாய் பிரீமியமாக தொகையாகக் காப்பீடு நிறுவனங்கள் வசூலித்துள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளித்துள்ள இழப்பீட்டுத் தொகை வெறும் ரூ.68 கோடி மட்டுமே என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுமார் 345 கோடி ரூபாய் நிதியை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம் கிராமத்தில் விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் போலியாக ஆவணங்கள் சேர்த்து ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்குக் கிராம நிர்வாக அலுவலர் உடந்தையாக இருந்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோசடி செய்து பெறப்பட்ட பணத்தை நேரில் சென்று கேட்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கிராம நிர்வாக அலுவலர் கொடுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். முறைகேடு தொடர்பாக இலட்சுமிபுரம் கிராம இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களைக் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பயிர்க் காப்பீட்டு மோசடி உட்பட அ.தி.மு.க அரசின் மோசடிகள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.

Also Read: 100 நாள் வேலைதிட்டத்தில் டிராக்டர் ஏறி பலியான பெண் குடும்பத்தினருக்கு தி.மு.க மா.செ நேரில் சென்று ஆறுதல்!