Tamilnadu

நீட் ரத்து கேட்டு போராடிய மக்கள் பாதை இயக்கத்தினர்... குண்டுக்கட்டாக கைது செய்த எடப்பாடியின் காவல்துறை!

தமிழகத்தில், 13 உயிர்களை காவு வாங்கிய நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு சமூக நல அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக மக்கள் பாதை அமைப்பினர் சென்னை சின்மையா நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மக்கள் பாதை அமைப்பினரின் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சாகும்வரை உண்ணாவிரதம் என்பதைத் தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அதேபோல, தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், மக்கள் பாதை இயக்கம் நடத்தும் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14ம் தேதி தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம், இன்றும் (செப்.,20) தொடர்ந்தது. அப்போது, போராட்டம் நடக்கும் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர், போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனநாயக ரீதியில் பொது மக்களுக்கு எவ்வித பங்கமும் விளைவிக்காமல் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை , அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வலுக்கட்டாயமாக கைது அதிமுக அரசு செய்திருப்பதற்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Also Read: “பால் பாக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுத்த அரசு, 6 பேர் உயிரை காக்க நடவடிக்கை எடுக்குமா?” : உதயநிதி ஸ்டாலின்