Tamilnadu

நிலத்தகராறு: அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி அவசியமில்லை - ஐகோர்ட் அதிரடி!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான ஏறத்தாழ 7 ஏக்கர் நிலத்தை காட்பாடியை சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குத்தகை பெறுகின்றனர். பின்னர் அந்த இடத்தை விற்பனை செய்ய சுந்தர்ராஜன் முடிவு செய்தபோது, ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் ஆந்திராவை சேர்ந்த பிரம்மானந்தம், சத்யநாராயணா ஆகியோர் இணைந்து வாங்கியுள்ளனர்.

நிலத்தை மேம்படுத்தி கட்டுமான பணிகளை செய்து கொடுப்பதற்காக 65 கோடி ரூபாய் தருவதாக காட்பாடியை , சேர்ந்தவர்களுடன், ஆந்திராவை சேர்ந்த இருவரும் ஒப்பந்தம் போட்டுள்ளனர். பின்னர் இந்த நிலத்தில் ஒரு பகுதியை தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரரான சேகர் ரெட்டி வாங்கியபின்னர், 13 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கபட்டு மீதமுள்ள 52 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதில் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடும் இருப்பதால் அவர் மீதும், சேகர் ரெட்டி மீது நடவடிக்கை கோரி ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், நிலம் தொடர்பான விவகாரத்தில், அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில் இருப்பதால் அமைச்சர் என்ற அடிப்படையிலோ இல்லை என்பதால், அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் முன்அனுமதி பெற தேவையில்லை என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

அதேபோல அமைசார் வீரமணிக்கு எதிராக சிவில் வழக்கு தொடர்வதோ அல்லது ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படுவதா என்பது குறித்து மனுதாரர்கள் முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Also Read: “சுயலாபத்துக்காக வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடும் கருப்பு ஆடுகள்” - சென்னை ஐகோர்ட் காட்டம்!