Tamilnadu

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், புதுச்சேரி,காரைக்காலில் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக

அவலாஞ்சி (நீலகிரி) , சின்னக்கல்லார் (கோவை) , கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 5செமீ, வால்பாறை PTO (கோவை), சோலையார் (கோவை) தலா 4 செமீ, மேல் பவானி (நீலகிரி) , காட்பாடி (வேலூர்) , தேவாலா (நீலகிரி) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 17 வரை பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 15 வரை தென் கிழக்கு , மத்தியகிழக்கு அரபிக் கடலை ஒட்டியுள்ள கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 13 மற்றும் 14ல் தென்மேற்கு, மத்தியமேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள வட தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 14.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்