Tamilnadu

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்வதில் சிக்கல் - மாணவர்கள் அவதி!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லுாரி தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. பின்னர், பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு, கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வழியில் தேர்வுகளை நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக வரும் 22 முதல் 29 வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மொபைல் எண், இ-மெயில் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்யவேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

ஆனால், ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணையதள பிரச்சனையால் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்ய முடியாமல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

கல்லூரி கட்டணம், தேர்வு கட்டணம் வசூலிப்பதில் மட்டும் கறாராகச் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகம், மாணவர்கள் நலன் விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக பொறியியல் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Also Read: பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: செப். 22 முதல் நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு!