Tamilnadu

டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அரசுப் பேருந்து : அதிகரிக்கும் தனியார் அடாவடி !

கொரோனா ஊரடங்கு காரணமாக இயங்காமல் இருந்த பேருந்து சேவைகள் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கியது. 6 மாதத்திற்கு மேலாக சொந்த ஊருக்கும், வேலைக்காக மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, செல்லமுடியாமல் இருந்த பொதுமக்கள் தற்போது கொண்டுவரப்பட்ட பேருந்து சேவையின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுங்க கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி, சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் தடுக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். விழுப்புரம் கோட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மார்க்கமாக ஓசூர், பெங்களூருக்கு 30 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுகிறது.

இந்த நிலையில், நேற்று விழுப்புரம் கோட்டத்தில் இருந்து ஓசூருக்கு புறப்பட்ட அரசு பேருந்துகள் கிருஷ்ணகிரியை கடந்து சென்றன. அப்போது, பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி சுங்க ஊழியர்கள் டோல்கேட்டை கடந்து செல்ல அனுமதிக்கவில்லை.

மேலும், பேருந்தில் நீண்ட நேரம் காந்திருந்த பயணிகள் அடுத்ததடுத்து வந்த சில பேருந்துகளின் அனுமதி வாங்கி ஓசூருக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அடுத்து வந்த 5 பேருந்துகளை அனுமதிக்காமல் ஊழியர்கள் காத்திருக்க வைத்தனர்.

இதனால், 3 பேருந்தின் பயணிகளே தங்களது கை காசை செலுத்தி சுங்க கட்டணம் செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். மேலும், 2 பேருந்துகள் சுங்க கட்டணம் செலுத்தாததால், மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்களிடம் கேட்டபோது, “சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேசிவிட்டோம்; நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என எங்கள் மேல் அதிகாரிகள் கூறிதான் அனுப்பி வைத்தார்கள்.

மேலும் இதற்கான தகவல் மற்றும் உரிமத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்ததாவும் தெரிவித்தார்கள். அப்படி இருக்கையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்த அனுமதிக்காமல் இருப்பது சரியல்ல. இதனால் பயணிகளும் நீண்ட நேரம் காத்திருந்திருந்தனர்” எனத் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு முடிந்து தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இந்த சூழலில், சுங்கக்கட்டண வசூலிக்கக்கூடாது என கோரிக்கை எழுந்துவரும் வேளையில், கட்டணம் செலுத்தவில்லை என அரசு பேருந்தையே அனுமதிக்காத சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழியுறுத்திவருகின்றனர்.

Also Read: “மோடி அரசின் பிடிவாதத்தால் மாணவர்களின் கனவு பாழானது”: கொரோனா காரணமாக 26% மாணவர்கள் JEE தேர்வு எழுதவில்லை!