Tamilnadu

இளைஞர் தீக்குளிக்க முயற்சி : அடியாட்களுடன் கந்துவட்டி கொடுமை செய்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மீண்டும் கந்துவட்டி கொடுமைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கந்து வட்டிக் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகுணா என்பவர் தனது மகன் கோபியுடன் கரூர் மாவட்டம் வையாபுரி நகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இதனிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுகுணா, பா.ஜ.க இளைஞரணி தலைவர் கணேசமூர்த்தி என்பவரிடம் 15 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

வாங்கிய 15 ஆயிரத்திற்கு, அசல் தொகையை விட கூடுதலாக வட்டி கட்டியுள்ளார். சுகுணா துணிக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் கடை மூடப்பட்டதால் தனது சொந்த ஊரான விருதுநகருக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே கடந்த நான்கு மாதங்களாக வட்டி கேட்டு கணேசமூர்த்தி தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சுகுணா விட்டிற்கு அடியாட்களுடன் கணேசமூர்த்தி சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த சுகுணாவின் மகன் கோபிநாத்திடம் அசல் தொகை மற்றும் வட்டியை கட்டுமாறு கணேசமூர்த்தி மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் கடந்த 1ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மறைத்து எடுந்து வந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில், கந்துவட்டி கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கரூர் பா.ஜ.க இளைஞரணி தலைவர் கணேசமூர்த்தி உட்பட 3 பேர் மீது 294 (b), 506 (1), கந்து வட்டி தடுப்புச் சட்டம் என 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவான பா.ஜ.க பிரமுகரை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழக பா.ஜ.கவில் ரவுடிகள் கட்சியில் இணைவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஏழை மக்களிடம் கந்து வட்டி என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: டோல்கேட் கட்டணம் செலுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அரசுப் பேருந்து : அதிகரிக்கும் தனியார் அடாவடி !