Tamilnadu

வட மாநில கலாச்சாரத்தை தமிழகம் கொண்டு வரும் பா.ஜ.க : நிர்வாகிக்கு துப்பாக்கி பரிசளித்த பா.ஜ.க தொண்டர்கள்!

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பா.ஜ.க, சினிமா பிரபலங்கள் இணைந்தது போய், தற்போது கட்சியில் பிரபல ரவுடிகள் இணைந்து வருகின்றனர்.

வரும் 2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுத்து எப்படியாவது டெபாசிட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க சற்று தீவிரமான மனநிலையில் செயல்பட்டு வருகிறது.

ஆகையால், சினிமா உள்ளிட்ட துறை சார்ந்த பிரபலங்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. வட மாநிலங்களில் நடக்கும் கலவரத்தை போன்று தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தவே பா.ஜ.க தொடர்சியாக ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ரவுடிகளை இணைப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கும் பா.ஜ.க நிர்வாகிகள், தற்போது மேடைகளிலேயே துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

மதுரை மாவட்ட திருப்பாலைத்தில் பா.ஜ.கவின் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் வந்திருந்தார்.

இந்த கூட்டத்தில் மதுரை பா.ஜ.க நிர்வாகி ஒருவர் ஏர்கன் துப்பாக்கி ஒன்றை வினோஜூக்கு பரிசளித்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட வினோஜ் அந்த துப்பாக்கியை வைத்து வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டாக்கத்தி வைத்து கேக் வெட்டும் ரவுடிகளை உடனே கைது செய்யும் காவல்துறை, துப்பாக்கியுடன் வலம் வரும் பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற பா.ஜ.க அரசின் வன்முறை அரசியலை முன்பே தடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: கருத்துக்காக கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் நினைவு தினம் : தமிழகத்திலும் இந்த நிலை வருமுன் தடுக்க முடியுமா?