Tamilnadu

கொரோனா இல்லாதவர்களுக்கு இருப்பதாக அறிவித்த கோவை மாநகராட்சி: பேனர் வைத்து அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்டவர்

கொரோனா இல்லாமலேயே கொரோனா தொற்று இருப்பதாகத் தவறுதலாகத் தெரிவித்த கோயம்புத்தூர் மாநகராட்சியின் செயல்பாட்டைப் பாதிக்கப்பட்டவர் பேனரில் அச்சிட்டு வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் கிழக்கு மண்டலத்தில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த

ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறி வீட்டை தகரத் தட்டிகளால் மறைத்து வாசலில் கோயம்புத்தூர் மாநகராட்சி பேனர் வைத்தது.

அதன் பின் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளத் தனியார் பரிசோதனைக்கூடம் ஒன்றில் சோதனை செய்துகொண்டுள்ளனர். அப்போது அந்த நால்வருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்தும் அந்த தகரங்களையோ, சுவரொட்டிகளையோ மாநகராட்சி ஊழியர்கள் நீக்கவில்லை என்பதால் கோபமடைந்த அக்குடும்பத்தலைவர் கொரோனா தொற்று இல்லாமலேயே, தொற்று உள்ளது என்று என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு நன்றி என்று அச்சிட்டு பெரிய பேனர் ஒன்றை அவரது வீட்டின் வாசலிலேயே வைத்துள்ளார். அந்த பேனரில் அவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்த ஆவணங்களையும் அவர் அச்சிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சரியாகச் சோதனை செய்யாமல் கொரோனா தொற்று உள்ளது என்று அக்குடும்பத்தினருக்கு மன உளைச்சலையும், பயத்தையும் தேவையில்லாமல் கோவை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது இதன் மூலமாகத் தெரியவந்துள்ளது.

மக்களைக் காக்கவேண்டிய மாநகராட்சி நிர்வாகமே தேவையில்லாமல் பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது அநியாயமானது என்று பொதுமக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது.