Tamilnadu

RTE சட்டத்தின் கீழ் கல்விச் செலவுத் தொகையை வழங்காதது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் : ஐகோர்ட்!

கடந்த 2016-17ஆம் ஆண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத் தொகையாக நிர்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகையை 2017-18ஆம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது.

இந்த மூன்று (2017-18, 2018-19, 2019-20) ஆண்டுகளில் மாணவருக்கான கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21ம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு அரசு சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு 11 ஆயிரம் என செலவு நிர்ணயித்தது தவறு என மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மூன்று ஆண்டுகளுக்கான தொகையை ஆறு வாரங்களில் தொகையை வழங்கும்படியும், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். மேலும், கல்வி செலவுத் தொகையை குறைத்தது தொடர்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை அமல்படுத்த அரசு தரப்பில் மேலும் 4 வார அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஏற்கனவே இரு முறை அவகாசம் வழங்கியும் நிலுவை தொகையை வழங்காததை சுட்டிக்காட்டி, வழக்கை செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் காணொலி காட்சி மூலம் ஆஜராக, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also Read: கல்வி, சுற்றுச்சூழலை அடுத்து மீனவர்களைப் பலி கொடுக்க தயாராகும் ‘NFP’ : மோடி அரசின் அடுத்த நாசகார திட்டம்!