Tamilnadu

பா.ஜ.க.,வில் சேர வந்த ரவுடிகள் கூட்டம் : போலிஸைக் கண்டதும் தலைதெறிக்க ஓடியதால் பரபரப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பா.ஜ.க நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினர் பா.ஜ.கவில் இணைவதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் சிலர்கள் கூட்டம் நடக்கும் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாகவும், மேலும், பிரபல ரவுடி சூர்யா பா.ஜ.கவில் இணைவதற்காக வந்துள்ளதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த போலிஸார், விழா நடந்த இடத்திலும் விசாரித்தனர். விழா மேடை அருகே போலிஸார் சென்றபோது, பா.ஜ.கவினரை போலிஸாரை தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், முக்கிய நபரான ரவுடி நெடுங்குன்றம் சூர்யா, போலிஸாரைக் கண்டதும், போலிஸ் பாதுகாப்புடன் காரில் வந்த பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகியின் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவரை பிடிக்கமுடியாமல் போலிஸார் தவித்தனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 பேரை போலிஸார் கைது செய்து செய்து ஓட்டேரி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியத்தில், ருக்மானந்தன், யுகா ஆதித்யன், சரத்குமார், ஜோசப் பெஞ்சமின், அன்பரசு, பிரபாகரன் என்ற 6 பேரும் பிரபல ரவுடி சூர்யாவின் கூட்டாளிகள் என்றும் தங்களை பா.ஜ.கவில் இணைத்துக்கொள்ள வந்ததாகவும், போலிஸாரை பார்த்தாதால் கூட்டத்திற்குச் செல்லாமல் சுற்றி திரிந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனிடையே இவர்கள் 6 பேரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தெரியவந்ததையடுத்து அவர்களை தொடர்ந்து விசாரித்து வந்ததனர். அப்போது குற்றப் பின்னணி கொண்ட 6 பேரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஓட்டேரி காவல்நிலைய உயை அதிகாரி கூறுகையில், “பா.ஜ.க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரபல ரவுடி சூர்யாவை பிடிக்க முயற்சித்தோம்; ஆனால், அதற்குள் அவர் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஒருவரின் காரில் ஏறி சென்று விட்டான்.

ரவுடி சூர்யா மீது பீர்க்கன்காரணை, சேலையூர், ஓட்டேரி, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, முன்னதாக, கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிகளை மீறி கூடியதாக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதும் குற்றிப்பிடத்தக்கது.

சமீப காலமாக, தமிழக பா.ஜ.கவில் சினிமா பிரபலங்கள் இணைந்தது போய், தற்போது கட்சியில் பிரபல ரவுடிகள் இணைந்து வருகின்றனர். வரும் 2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுத்து எப்படியாவது டெபாசிட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க சற்று தீவிரமான மனநிலையில் செயல்பட்டு வருகிறது.

ஆகையால், சினிமா உள்ளிட்ட துறை சார்ந்த பிரபலங்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. இது அக்கட்சியில் பல ஆண்டுகளாக இருந்து பணியாற்றி வந்தவர்களுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: போலிஸுக்கு பயந்து பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் அடைக்கலம்.. 6 படுகொலை உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவை!