Tamilnadu

செப்.,15 க்கு பிறகு கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு - அமைச்சர் அறிவிப்பால் மாணவர்கள் அச்சம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாத நிலையில், கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற அனைத்து பருவ தேர்வுகள், அரியர் தேர்வுகள் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இறுதியாண்டு பருவத் தேர்வு, செப்.,15ம் தேதிக்குப் பின் நடைபெறும் எனவும் இறுதி பருவத் தேர்வுக்கான விரிவான அட்டவணை, தேர்வு மையங்களின் விபரம் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இறுதியாண்டு தேர்வுகளை மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது எனவும், மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பி.ஆர்க் (கட்டிடக் கலை) இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் www.tneaonline.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சற்றும் குறையாத நிலையில், மத்திய அரசு நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் செய்து வருகிறது. தமிழக அரசோ, உடனடியாக செமஸ்டர் தேர்வுகளை நடத்தத் துடித்து வருகிறது.

இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்து மாணவர்களின் அழுத்தத்தைப் போக்கிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்து மாணவர்களின் அழுத்தத்தை போக்கிடுக” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!