Tamilnadu

விசாரணைக்கு சென்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை: போலிஸார் அடித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி புகார்!

சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). இவரது வீட்டில் பழைய வழக்கு ஒன்றில் தேடப்படும் தலைமறைவான குற்றவாளி முல்லா(எ) சிவகுமார் பதுங்கி இருப்பதாக கண்ணகி நகர் போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது சம்மந்தப்பட்ட நபர் இல்லை என்பதால் அவரது உறவினரான ராஜேந்திரன் என்பவரை நேற்று காலை 10 மணியளவில் கண்ணகி நகர் காவல் நிலையம் அழைத்து வந்து சிவகுமார் குறித்து விசாரணை செய்துவிட்டு 1 மணியளவில் அனுப்பி வைத்து விட்டனர்.

மீண்டும் ராஜேந்திரன் மது அருந்திவிட்டு குடிபோதையில் மாலை 6.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். குடிபோதையில் இருந்ததால் நாளை காலை வரும் படி அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்றவர் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை மீட்ட அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவர்கள் பரிசோதித்து விட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். உடலை பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு போலிஸார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராஜேந்திரனின் மனைவி அனிதா என்பவர் கண்ணகி நகர் போலிஸார் சந்தேகத்தின் பேரில் தனது கணவரை அடித்து அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதன் விளைவாக வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாகவும் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து கண்ணகி நகர் போlஇஸாரிடம் கேட்ட போது அவரை அடிக்கவில்லை விசாரணைக்காக அழைத்து வந்தோம், விசாரித்துவிட்டு முறைப்படி எழுதி வாங்கிக் கொண்டு நல்லபடியாக அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.

Also Read: ரவுடி சங்கர் போலிஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? - உறவினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு!