Tamilnadu

விவசாயிகளால் ATM மூலம் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியுமா? - நடைமுறையை நிறுத்திவைக்க ஐகோர்ட் ஆணை!

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த நகைக்கடன், விவசாயக் கடன்களை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே பெற வேண்டும் எனவும், ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கடந்த ஜூலை 7ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புதிய நடைமுறை காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும், நூறு கிலோமீட்டர் தூரம் சென்று மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு செல்லக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் முறையில் பரிட்சயம் இல்லை என்பதால், இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் மானிய தொகைகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே செலுத்தப்படுவதால், நபார்டு வங்கி அறிவுரைப்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு கடன் தொகைகள் சென்றடையவும், இடைத்தரகர்களை தவிர்க்கவும் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பருவமழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக பெற முடியாது என்பதால், இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவுக்கு பதிலளிக்கும்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Also Read: “ரிசர்வ் வங்கியைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கி தொகையையும் சுருட்ட மோடி அரசு சதி”- சிபிஐ(எம்) குற்றச்சாட்டு!