Tamilnadu

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் காலமானார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் காலமானார்!

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், புகழ்பெற்ற தொழிலதிபருமான வசந்தகுமார் எம்.பி., (70) கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தனது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும், சென்னையிலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி வசந்தகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முதல் வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சற்று முன்பு வசந்தகுமார் காலமானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த எம்.பி. வசந்தகுமார் நாங்குனேரி தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹெச்.வசந்தகுமார் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.