Tamilnadu

சிலைக்கடத்தல் வழக்கு : 41 ஆவணங்கள் மாயம்... ரூ.400 கோடி மோசடி : தமிழக டி.ஜி.பி-க்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்ர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம், தமிழகத்தில் உள்ள பழமையான சாமி சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிலை கடத்தலில் அரசியல்வாதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்குத் தொடர்பு உள்ளது.

இந்த நிலையில், சிலை கடத்தல் குறித்து பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் கேஸ் டைரி எனப்படும் விசாரணை விவர ஆவணங்களை காணவில்லை. இதன் காரணமாக, இந்த வழக்குகள் கைவிடப்பட்டு, அந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர். எனவே, வழக்கு ஆவணங்கள் மாயமானது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தினால், அரசியல்வாதிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

எனவே, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, 41 வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயமானது குறித்து உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும், விசாரணை ஆவணங்களைக் காணவில்லை என்ற அடிப்படையில் இந்த 41 வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டு வர தமிழக காவல்துறை டி.ஜி.பிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், விசாரணை விவர ஆவணங்கள் மாயமான வழக்குகளில் விசாரணையை முடித்து வைத்த காவல் கண்காணிப்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் மேலும் அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இதில் சுமார் 400 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றதாகவும் வாதிட்டார்.

முக்கியமான வழக்கு என்று கருத்து தெரிவித்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி, சிலை கடத்தல் பிரிவு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசே காப்பாற்ற நினைக்கிறதா?” - சிலை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி!