Tamilnadu

“ஊருக்கு மட்டும் உபதேசம்.. 144 தடை உத்தரவு மக்களுக்கு மட்டும்தானா?” : ஊரடங்கை தொடர்ந்து மீறும் பா.ஜ.க!

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்திவதும் என கடும் நடவடிக்கைகளை போலிஸார் எடுத்து வருகின்றனர். இதனால் அரசின் உத்தரவுகளை மதித்து மக்கள் அனைவருமே வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ஆனால், அரசின் உத்தரவுகளை ஆளும் பா.ஜ.க அரசின் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஊரடங்கை மதிக்காமல் கூட்டம் நடத்துவது, வாகனங்களில் ஊர் சுற்றுவது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பது சமூக ஊடகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் கே.டி ராகவன் தலைமையில் நேற்று பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் சமூக இடைவெளியை சற்றும் கடைபிடிக்காமல் பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் கே.டி ராகவன் என அனைவரும் அருகருகே அமர்ந்தபடி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தடை உத்தரவை மீறி கூட்டம் நடத்திய பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் கே.டி ராகவன் உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தடை உத்தரவு, எதிர்க்கட்சியினர் மற்றும் மக்களுக்கு மட்டும்தானா என்று கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர், பா.ஜ.கவினர் அத்துமீறி இதுபோன்று கூட்டங்கள் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.