Tamilnadu

நீட் விண்ணப்பம்: மோடி அரசின் சூழ்ச்சியால் தமிழகத்தில் 17% குறைந்தது; உ.பி., பீகாரில் 16,28% ஆக அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு மோடி அரசு கொண்டு வந்துள்ள நீட் நுழைவுத் தேர்வால் சிதைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரடமடைந்து வரும் நிலையிலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என மத்திய பாஜக அரசு பிடிவாதமாக உள்ளது.

மத்திய அரசின் பிடிவாதம் மற்றும் மாநில அரசின் அலட்சியத்துக்கு இடையே நீட் தேர்வு முறைகேடு, பண வசதி படைத்தவர்கள் மட்டுமே நீட் பயிற்சி பெற முடியும் என்ற நிலையால் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது.

நடப்பாண்டு நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டை விட 17 சதவிகிதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 1.17 லட்சத்து 990 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.

அதேச்சமயத்தில் பிகார் மாநிலத்தில் இருந்து முன்பை விட 28 சதவிகிதம் பேரும், உத்தர பிரதேசத்தில் இருந்து 16 சதவிகிதம் பேரும் கூடுதலாக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் என நாட்டின் பல்வேறு தலைவர்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவுவதால் அதனை மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.