Tamilnadu

ரவுடி சங்கர் போலிஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? - உறவினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு!

நான்கு நாட்களுக்கு முன்பு என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் வழக்கில் இப்போது மீண்டும் ஒரு பூகம்பம் கிளம்பியிருக்கிறது. சங்கரை காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்யவில்லை. காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொலை செய்துவிட்டு என்கவுன்ட்டர் செய்ததுபோல சித்தரித்து நாடகமாடியதாக சங்கரின் உறவினர்கள் பரபரப்பு புகார் அளித்திருக்கின்றனர்.

கடந்த வாரம் சென்னையில் நடந்த ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சா உள்ளிட்ட கடத்தல் வழக்குகள் மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கரை அயனாவரத்தில் வைத்து போலிஸார் கைது செய்ய முயற்சித்தபோது, ரவுடி சங்கர் காவலர் முபாரக் என்பவரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பித்துச் செல்ல முயன்றதாகவும் அதனால் அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் போலிஸார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது ரவுடி சங்கர் என்கவுன்ண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்படவில்லை. அவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டனர். தப்பியோடியதால் துப்பாக்கியால் சுட்டதாக போலிஸார் சொல்லும் அனைத்து தகவல்களும் பொய் என ரவுடி சங்கரின் குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர்.

சென்னை, அயனாவரத்தில் கஞ்சா வழக்கில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த ரவடி சங்கரை அயனாவரம் காவல் ஆய்வாளர் நட்ராஜ் கடந்த 21ம் தேதி கைது செய்ததாகச் சொல்லப்படுகின்றது. அவரிடம் நடத்திய விசாரணையில் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு முட்புதரில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கஞ்சா இருக்கும் இடத்தை காண்பிப்பதற்காக ரவுடி சங்கரை நியூ ஆவடி சாலையில் உள்ள முட்புதருக்கு போலிஸார் அவரை அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கே ரவுடி சங்கர் பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து போலிஸாரை தாக்க முயற்சி செய்ததாகவும், அப்போது அவருக்கு அருகில் இருந்த காவலர் முபாரக்கை சங்கர் அரிவாளால் வெட்டியதாகவும் சொல்லப்பட்டது. இதனால், அவரிடம் இருந்து காவலரைக் காப்பாற்றவும், ரவுடியை கைது செய்யவும் காவல் ஆய்வாளர் நட்ராஜ் சங்கரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்த சங்கரை, அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலிஸார் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.

இந்நிலையில் போலிஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சங்கரின் சடலத்தை அவரது உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர். சங்கரை கைது செய்து அழைத்துச் சென்ற அயனாவரம் காவல் ஆய்வாளர் நட்ராஜ், காவல்நிலையத்தில் வைத்து சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்படி அடித்ததில் சங்கர் காவல்நிலையத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலைச் சம்பவத்தைப் போல, சங்கரையும் விசாரணை என்கிற பெயரில் காவல் ஆய்வாளர் நட்ராஜ் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டை ரவுடி சங்கரின் உறவினர்கள் வைத்துள்ளனர். அடித்து கொலை செய்ததை மறைப்பதற்காகவே நியூ ஆவடி சாலையில் உள்ள முட்புதரில் வைத்து சங்கரை சுட்டு என்கவுன்ட்டர் செய்தது போல போலிஸார் நாடகமாடியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

காவல் ஆய்வாளர் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தொடர்ந்து அயனாவரம் காவல்துறையினர் தங்களை மிரட்டி வருவதாகவும், போலிஸாரால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது, அதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ரவுடி சங்கரின் அக்கா ரேணுகா காவல்துறை உயர் அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் வாக்குறுதி தந்ததினால், இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து சங்கரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய காவல்துறையினரே, அதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு இப்படியான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: வட்டிப் பணம் கேட்டதால் மூதாட்டியை கொன்று எரித்த நெசவுத் தொழிலாளி - ஊரடங்கில் அதிகரிக்கும் கொலைகள்!