Tamilnadu

மனைவி சிகிச்சைக்காக சைக்கிளில் 120கி.மீ பயணம் செய்த கணவர் - 5 மாதத்திற்கு பிறகு மனைவியை பறிகொடுத்த சோகம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன். இவரது மனைவி மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

இதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மனைவியைச் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்த அறிவழகன் கும்பகோணத்திலிருந்து மனைவியை சைக்கிளில் அமர்த்தி 120 கிமீ தூரம் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இடுப்பில் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு, உடலில் சட்டைக்கூட இல்லாமல் வெறும் துண்டு மட்டும் போட்டிருந்த அறிவழகனின் தோற்றத்தையும், மனைவியைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியையும் கண்டு ஜிப்மர் மருத்துவர்கள் மனம் இறங்கி, உடனே அவரின் மனைவியை வார்டில் சேர்த்து ஹீமோதெரபி சிகிச்சையளித்தனர்.

பின்னர் மூன்று நாள்கள் மஞ்சுளாவுக்கு உரிய சிகிச்சை அளித்துவிட்டு ஆம்புலன்ஸில் இருவரையும் கும்பகோணத்தில் அவர்களது வீட்டில் பத்திரமாக இறக்கியும்விட்டனர். சிகிச்சைக்காகவும், ஆம்புலன்ஸுக்காகவும் எந்தப் பணமும் ஜிப்மர் நிர்வாகம் வாங்கவில்லை.

தன் மனைவியின் சிகிச்சைக்காக அவரை சைக்கிளில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த பாசக்கார கணவரை பலரும் பாராட்டி, பல தன்னார்வலர்கள் மருத்துவ உதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய மஞ்சுளா, கடந்த 9 மாதங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியும், சோதனையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'உடம்பில் சட்டையில்லை... உள்ளத்தில் உறுதி'- மனைவியை மருத்துவமனைக்கு சைக்கிளில் அழைத்து வந்த பாசக்கணவர்!