Tamilnadu

“வருவாயை பெருக்க அருகருகே மதுக்கடைகளை அமைக்க அனுமதிப்பதா?”- அ.தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை குட்டு!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ரங்கராஜபுரத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் பரிசீலித்து மதுக்கடைகளை திறக்க அனுமதித்திருப்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, ஒவ்வொரு மதுக்கடைகள் முன்பும் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என பெரிய எழுத்தில் எழுத வேண்டுமென விதிகள் உள்ளன. இருப்பினும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்திற்காக பல இடங்களில் அருகருகே டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதிப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

விழாக்காலங்களில் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்கிறது என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் விரிவான ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் அதனை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Also Read: டாஸ்மாக் திறப்பு : “வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!