Tamilnadu

“ஆன்லைன் வகுப்பால் அதிகரிக்கும் மாணவர் மரணங்கள்” : ஆன்லைன் வகுப்பு புரியாத மாணவன் விஷம் குடித்து தற்கொலை?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் கான்ட்ராக்டர் பாண்டி. அவரது மனைவி மீனா. இவர்களுக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் 15 வயதான அபிஷேக் உலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட அபிஷேக் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வந்திருகிறார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அபிகேஷ் படித்து வந்த கொடைக்கானல் தனியார் பள்ளியிலும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஆன்லைனில் நடத்திவந்த வகுப்புகள் தனக்கு சரிவரி புரியல்வில்லை என்பதால் மாணவர் அபிஷேக் அதில் சரிவர பங்கேற்காமல் இருந்துள்ளார்.

இதனால் அபிஷேக்கின் தந்தை பாண்டி தொடர்ந்து மகனை கண்டித்து வந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மாணவன் சம்பவத்தன்று இரவு உணவு சாப்பிடாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்திருக்கிறார். அதிகாலை அபிஷேக்கிற்கு வலிப்பு வந்து உயிருக்கு போராடியதை பார்த்த தந்தை பாண்டி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

மாணவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாணவரின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆன்லைன் வகுப்பில் சரிவர படிக்காத காரணத்தினால் தந்தை திட்டியதால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.