Tamilnadu

“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், வருடத்தில் 365 நாட்களிலும் அனைத்து மத பண்டிகைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரிசாவில் பூரி ஜெகநாதர் கோவில் திருவிழாவிற்கு மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுப்பேற்று கொண்டு நடத்தியது.

ஆனால், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்து, பொது இடங்களில் சிலை வைப்பதற்கும், ஊரவலமாஅ எடுத்துச் செல்வதற்கும் அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவினை பிறப்பித்துள்ளது. எனவே தமிழக அரசின் உத்தரவிற்கு தடைவிதிக்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சந்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா கூட இந்த முறை நடைபெறவில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகர் சிலை வைக்க ஏன் அவசர படுகிறீர்கள்.

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் விஷயத்தில் தமிழ்நாட்டை பற்றி மட்டும் பேச வேண்டும். மற்ற ஊர்களை உதாரணம் காட்டி பேசுவதை ஏற்க முடியாது.

மேலும், கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில், சுயக்கட்டுபாடுடன் விதிகளை மீறாமல் விநாயகர் சிலை வைப்பதற்கு போலிஸ் பாதுகாப்பு எதற்கு கேட்கிறீர்கள்? அனைவரும் நீதிமன்றத்தின் முன் சமமே.

விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வணங்கலாம். அதே போல் இந்த கொரோனா பாதிப்பு நேரத்திலும் அரசு அனுமதித்துள்ள சிறிய கோவில்களில் மக்கள் சுய கட்டுப்பாடுடன் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக வழிபடலாம். அதற்கு எந்த வித தடையும் இல்லை.

முன்னேறிய நாடுகள் கூட கொரோனாவை சமாளிக்க திணறி வருகிறது. இந்த நிலையில் இது போன்ற விழாக்களை நடத்துவது சிரமத்தை ஏற்படுத்தி விடும்.

எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தேசிய பேரிடர் மேலான்மை சட்டத்தின் கீழ் அனுமதிக்க இயலாது. விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

Also Read: கள்ளழகர் விழா நடைபெறவில்லை; அப்போது யாரும் போராடவில்லை: பிள்ளையார் சதுர்த்திக்கு மட்டும் துடிப்பது ஏன்?