Tamilnadu

“அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவருக்கு புதிய ஆட்டோ வழங்கிய தி.மு.க தலைவர்”- ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து நன்றி!

கொரோனா ஊரடங்கில் வருவாய் இழந்த வேதனையில், ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்திய சென்னை அயனாவரத்தை சேர்ந்த ததாண்டமுத்துவை நேரில் வரவழைத்து, புதிய ஆட்டோ வழங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து கடந்த சில மாதங்களாக ஆட்டோவின் பர்மிட், உரிமம் நீட்டிப்பதற்கு அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலைக்கழிக்கப்பட்டு வந்ததால் விரக்தியில் கடந்த 7ஆம் தேதியன்று தனது ஆட்டோவை தீயிட்டு எரித்தார்.

இதனை அறிந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அவரைச் சந்தித்து புதிய ஆட்டோ ஒன்றை வாங்கிக்கொள்ள நிதியுதவி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த நிதியுதவி மூலம் புதிய ஆட்டோ ஒன்று வாங்கப்பட்டு, அதன் சாவியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தாண்டமுத்துவிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து, “எனது ஆட்டோவை தீயிட்டு எரித்த செய்தியை கேட்டு, எனது நிலையை அறிந்து, உடனடியாக நிதியுதவி அளித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆட்டோவை இன்று என்னிடம் ஒப்படைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்திய மருத்துவ சங்கம் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!