Tamilnadu

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி... சென்னை உட்பட வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் , கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச நீலகிரி மாவட்டத்தில் தேவலா 5 செமீ, பந்தலூர் 2 செமீ, மேல் பவானி, அவலாஞ்சி , ஹாரிசன் எஸ்டேட் , பிரையர் எஸ்டேட் தலா 1செமீ. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி2 செமீ, சேலம் ஏற்காடு 1செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

ஆகஸ்ட18 முதல் 20 வரை வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், இன்றும் நாளையும் (ஆக., 18, 19) கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல, ஆகஸ்ட20 முதல் ஆகஸ்ட்22 வரை வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்திலும், ஆகஸ்ட18 முதல் 22 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு...

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 19.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 1.5 முதல் 2.7 மீட்டர் வரை எழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.