Tamilnadu

நீட் தேர்வு நடைபெறுவதற்கு எடப்பாடி அரசே காரணம்: வழக்கில் எதிர்மனுதாரராக இணையாதது ஏன்? - காங்கிரஸ் கேள்வி!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பயிற்சி வகுப்புகளுக்கே போகமுடியாத சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் நீட் தேர்வு நடத்துவது ஏன் எனக் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

அதில், “மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில் நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘நீட் தேர்வு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை, நீட் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும், நீட் தேர்வு நடத்துவதற்குரிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் , ‘நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது, அரசு வழக்கறிஞரின் கருத்தை ஏற்றுக் கொண்டு, தேர்வை ஒத்தி வைக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வில் 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நகரங்களில் மாணவர்களுக்கு இருக்கிற வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதற்கு எந்த வசதியும் இல்லை. நீட் தேர்வு நடத்தப்பட்டால், கடுமையாக பாதிக்கப்படப்போவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களே ஆகும்.

அதே நேரத்தில் கணக்காயர் தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ. வகுப்புகளுக்கான தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீட் தேர்வை நடத்துவதில் மத்திய பா.ஜ.க. அரசு காட்டிய உறுதியின் காரணமாக உச்சநீதிமன்றம் நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டது.

Also Read: “நீட் தேர்வை ஒத்திவைக்கவோ, ஆன்லைன் மூலம் நடத்தவோ முடியாது” - மாணவர்கள் வாழ்வில் விளையாடும் மோடி அரசு!

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பினால் ஏற்படுகிற பாதிப்பிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு உரிய தீர்வுகளை காண முயல வேண்டும். அந்தவகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பினால் நடைமுறைக்கு வருகிற நீட் தேர்வை ரத்து செய்வதற்குரிய முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வதற்கு, பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும்.

நீட் தேர்வு குறித்த வழக்கில் தமிழக அரசு இணைத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவாக, நீட் தேர்வு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க அரசு தான் காரணமாகும். அதைத் தடுக்கத் தவறிய எடப்பாடி அரசு உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, மிக அதிகளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “நீட் தேர்வை கைவிட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்துக” - கி.வீரமணி வலியுறுத்தல்!