Tamilnadu

தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அதனை கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலையை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தடையை மீறி விநாயகர் சிலைகளை வைக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கும், டி.ஜி.பிக்கும் மனு அளித்துள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமேனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ரம்ஜான் பண்டிகைக்கும், தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவிற்கும் அரசு அனுமதி அளித்ததால், விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், உற்பத்தியாளர்கள் ஏராளமான சிலைகளை செய்து விட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also Read: சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ மனுவில் திருப்தியில்லை; முழு விசாரணை அறிக்கை தேவை - ஐகோர்ட் மதுரை கிளை

விநாயகர் சதுர்த்தியின் போது எப்படியும் சிலைகளை விற்று விடலாம் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி சிலைகளை உருவாக்கியுள்ளதாகவும், தற்போது அரசு விதித்துள்ள தடை உத்தரவால் மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு ஆளாக நேரிடும் சூழல் நிலவுவதாகவும், காகிதக் கூழில் செய்யப்பட்ட சிலைகள் என்பதால் இதனை அடுத்த ஆண்டிற்கும் பயன்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.