Tamilnadu

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீலகிரியில் கனமழை தொடரும்.. நாளைய வானிலை நிலவரம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டிஇருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச நீலகிரி பந்தலூரில் 11 செமீ மழையும், கோவை வால்பாறை வட்டாச்சியர் அலுவலகம் 9 செமீ, நீலகிரி தேவலா மற்றும் பிரேயர் எஸ்டேட் தலா 8 செமீ, கோவை சின்னக்கல்லார், புதுக்கோட்டை அரிமளம், நீலகிரி அவலாஞ்சி தலா 7செமீ, கோவை வால்பாறை மற்றும் சின்கோனா தலா 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 12 முதல் 15 வரை மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 12 முதல் 16 வரை மகாராஷ்டிரா ,கோவா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 12 முதல் 16 வரை தென் மேற்கு , மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலை முன்னறிவிப்பு..

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு வரை கடல் அலை 2.5 முதல் 3.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.