Tamilnadu

இடப்பற்றாக்குறையால் வேறு இடத்துக்கு மாற்றப்படும் சட்டமன்றக் கூட்டத்தொடர்? - தமிழக அரசு முடிவு!

கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை மாற்று இடத்தில் நடத்துவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான முடிவு இம்மாதத்தில் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாவதங்கள் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற்றது. சட்டப்பேரவை விதிகளின்படி வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதிக்குள் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கொரனா வைரஸ் தொற்றின் காரணமாகவும் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள இட நெருக்கடி காரணமாகவும் குறிப்பிட்ட தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடங்களில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை கூட்டலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு முந்தைய காலங்களில் அவ்வாறு நடைபெற்றிருக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலோடு நடைபெற்ற இடங்களையும் சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் வழங்கியுள்ளன.

இதுவரை சட்டப்பேரவை கூடிய இடங்கள்

* 1921 - 1937 - மேலவை மண்டவம், புனித ஜார்ஜ் கோட்டை

* 14.7.1937 - 21.12.1937 - செனட் மண்டபம் சேப்பாக்கம் (தற்போதய நூற்றாண்டு விழா மண்டபம்)

* 27.1.1938 - 26.10.1939 - விருந்தினர் மாளிகை (இராஜாஜி மண்டபம்)

* 24.5.1946 - 27.3.1952 - பேரவை மண்டபம், புனித ஜார்ஜ் கோட்டை

* 03.05.1952 - 27.12.1956 - புதிய சட்டமன்ற பேரவை மண்டபம், (தற்போதய கலைவாணர் அரங்கம்)

* 20.04.1959 - 30.4.1959 - அரண்மூர் மாளிகை, உதக மண்டலம்

தற்போது இருக்கும் சட்டமன்றம் இட நெருக்கடி வாய்ந்த இடமாக இருப்பதால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே இந்த மாத இறுதிக்குள் ஆலோசனை நடத்தி மாற்று இடத்தை தேர்வு செய்ய சட்டப்பேரவை செயலகமும் தமிழக அரசும் முடிவெடுத்துள்ளது.

சென்னையில் மாற்று இடம் என பார்க்கும் போது சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கம் அல்லது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபம் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் சட்டப்பேரவை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

Also Read: “ஆகஸ்ட் 17ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை” - தமிழக அரசின் அறிவிப்பால் பெற்றோர்கள் அச்சம்!