Tamilnadu

பா.ஜ.க-வில் இணையும் குற்றப் பின்னணி கொண்டவர்கள்: ஆனால், தலைவருக்கே தெரியாதாம்? -அரங்கேறும் ஏமாற்று நாடகம்

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கடந்த மார்ச் மாதத்தில் பதவி ஏற்றதில் இருந்தே பல சினிமா பிரபலங்கள் இணைந்தனர். அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் பா.ஜ.கவில் இருந்த போது குற்றவழக்குகளில் சிக்கி பா.ஜ.கவில் இருந்து நீக்கப்பட்டவர்களும் கூட தற்போது மீண்டும் அவர்களை இணைத்து பதவி கொடுத்துள்ளனர்.

தமிழக பா.ஜ.கவில் சினிமா பிரபலங்கள் இணைந்தது போய் தற்போது கட்சியில் பிரபல ரவுடிகள் இணைந்து வருகின்றனர். வரும் 2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுத்து எப்படியாவது டெபாசிட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க சற்று தீவிரமான மனநிலையில் செயல்பட்டு வருகிறது.

ஆகையால், சினிமா உள்ளிட்ட துறை சார்ந்த பிரபலங்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. இது அக்கட்சியில் பல ஆண்டுகளாக இருந்து பணியாற்றி வந்தவர்களுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பண மதிப்பிழப்பின் போது கோடிக்கணக்கில் மோசடி செய்து போலிஸில் சிக்கியவருக்கு தமிழக பா.ஜ.க இளைஞர் அணி பதவி!

முன்னதாக சேலம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் ஏராளமான கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி முரளி என்கிற முரளிதரனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தற்போது வட சென்னையைச் சேர்ந்த போலிஸாரால் வலைவீசி தேடப்பட்டு வந்த கல்வெட்டு ரவி என்ற பிரபல ரவுடி பா.ஜ.க பொது செயலாளர் கருநாகராஜன் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

ரவியுடன் சேர்ந்து சத்யா என்ற சத்தியராஜ் என்ற மற்றொரு ரவுடியும் பாஜகவில் இணைந்திருக்கிறார். 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கல்வெட்டு ரவி மீது 6 படுகொலைகள் உள்ளிட்ட 35 வழக்குகள் உள்ளது.

போலிஸாரால் தேடப்பட்டு வரும் ரவுடிகளின் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இருப்பவர்தான் பா.ஜ.கவில் இணைந்த கல்வெட்டு ரவி. ஆகையால் போலிஸிடம் இருந்து தப்பிப்பதற்காக பா.ஜ.கவில் அடைக்கலமாகியிருக்கிறார் ரவுடி ரவி.

அதேபோல, ரவுடி சத்யா மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளது. 2 முறை குண்டர் சட்டத்தில் கைதாக ஜாமினில் வெளி வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் தற்போது வட சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும் பா.ஜ.க பிரமுகர் மூலம் அக்கட்சியில் இணைந்துள்ளார்கள்.

இவ்வாறு தொடர்ந்து பா.ஜ.கவில் ரவுடிகள் இணையும் பட்டியல் கூடிக்கொண்டே போவது அக்கட்சியினரிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தான் கட்சியில் இணைவார்கள். ஆனால் பிரபல ரவுடி கட்சியில் இனைந்தது பா.ஜ.க தலைவருக்கு தெரியாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Also Read: போலிஸுக்கு பயந்து பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் அடைக்கலம்.. 6 படுகொலை உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவை!

இதுதொடர்பாக பேசிய எல்.முருகன், “கல்வெட்டு ரவி கட்சியில் இணைந்ததாக தகவல் சொன்னார்கள். அது பற்றி விசாரித்தால் தான் முழு விவரம் தெரியவரும்” என்றார். பா.ஜ.க தலைவரின் இந்த பேச்சு பா.ஜ.க-வினரிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடிகள், மோசடி பேர்வழிகளை கட்சியில் இணைத்து மக்களிடையே தன் செல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறான இழி செயல்களில் ஈடுபட்டு தன் கட்சி உறுப்பினர்களிடையேவும் தமிழக பாஜக கெட்ட பெயர்களை ஈட்டி வருகிறது.

Also Read: 5 முறை குண்டர் சட்டத்தில் கைதானவருக்கு பா.ஜ.கவில் மாவட்ட இளைஞரணி பதவி!