Tamilnadu

கூலி கொடுக்க மறுத்தவரை குத்திக் கொலை செய்த கட்டடத் தொழிலாளி : செங்கல்பட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சி அலுவலகம் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தவர் ரகு என்ற ரகோத்தமன் (38). இவர், விழுப்புரம் மாவட்டம்  திருவெண்ணெநல்லூர் டி.கொணலாவாடி கிராமத்தை சேர்ந்தவராவார். இவருக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.

ஊரடங்கு காரணமாக அவரது சொந்த கிராமத்தில் வேலைவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், அவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றி தகராறாக மாறியிருக்கிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக செங்கல்பட்டில் உள்ள அனுமன் நகரிலுள்ள அவரது நண்பர் சந்திரன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார் ரகு. இந்த நிலையில் இவருடன் வேலை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதான ரமேஷ்குமார் என்பவர் தனது மூன்று நாள் சம்பள பாக்கியான 2100 ரூபாயை ரகோத்தமனிடம் கேட்டுள்ளார். அப்போது ரகோத்தமன் தர மறுத்திருக்கிறார். ஆனாலும் ரமேஷ்குமாருக்கு தேவை இருக்கவே தொடர்ச்சியாக பணம் கேட்டு வந்திருக்கிறார், இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் ரகோத்தமனை பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று இரவு மீண்டும் ரகோத்தமனிடம் சம்பள பாக்கியை கேட்டிருக்கிறார். அதனால் மீண்டும் தகராறு ஏற்படவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரகோத்தமனின் முகம், உடல், கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைக்குலைந்து போன ரகோத்தமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் ரகோத்தமனை கொன்ற கத்தியுடன் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் ரமேஷ். அப்போது செல்லும் வழியிலேயே இரவு நேரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த ரகோத்தமனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ரமேஷிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா விற்பனை செய்த பட்டாதாரி பெண்; கையும் களவுமாக சென்னையில் கைது!